Translate

December 2025

 மத்திய மண்டலம்


டிசம்பர் 27 K6 பணித்தளத்தில், அரசு பணிக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினைத் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார்; இதில்,  12 மாணவர்கள் தங்கி பயிற்சிபெற்றுவருகின்றனர். தசரா பண்டிகை நாட்களில், இப்பணித்தளத்தில் 10 நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேசத்திற்காக பாரத்துடன் ஜெபித்ததோடு, பத்து தலைப்புகளின் கீழ் ஆவிக்குரிய பாடங்களையும் கேட்டறிந்தனர். இப்பணித்தளத்தில் பயிற்சிபெறும் மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் மற்றும் அவர்கள் கிறிஸ்துவை சமுதாயத்தில் பிரதிபலிக்கவும் ஜெபிப்போம்.    

டிசம்பர் 28 பல்வேறு பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 22 விசுவாசிகள், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! தரிஹட் பணித்தளத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 275 விசுவாசிகள் பங்கேற்று, ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் பெலவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் சுகம் பெறவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 29 திலௌத்து, ராஜ்பூர் மற்றும் நவாட்டா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில், பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். நவாட்டா பணித்தளத்தில் சுவிசேஷக் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாகச் செய்யப்பட்ட நற்செய்தி ஊழியத்தின் மூலமாக, பணித்தள மக்கள் அநேகருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் நற்செய்திக்குச் செவிகொடுக்கவும், இயேசு ஏற்றுக்கொள்ளவும், எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 30 பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி, நற்செய்திக் குழுக்கள் மற்றும் பல்வேறு சிறுவர் ஊழியங்களின் மூலமாக 2500-க்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. பணித்தளச் சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் மற்றும் அவர்களது பெற்றோர் தேவனை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 31 அம்ரிடோலா மற்றும் தாவன்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களின் மூலமாக, பணித்தள மக்கள் பலர் இலவச மருத்துவ ஆலோசனையுடன் மருத்துவச் சிகிச்சையையும் பெற்றனர். தொடர்ந்து, கருவந்தியா பணித்தளத்தின் ஜெம்ஸ் இல்லத்தின் சிறுவர் சிறுமியருக்கும் சுகாதாரத்திற்கடுத்த அறிவுரைகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ரோஹ்தாஸ் கோட்டத்திற்கு கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும், படுக்கா புத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற்பாதுகாப்பு மையக் கட்டிடப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.  


November 2025

 மத்திய மண்டலம்



நவம்பர் 26 பல்வேறு பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில் பணித்தள விசுவாசிகள் சுமார் 500 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். தேவ செய்தியைத் தொடர்ந்து, விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசம் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் விசுவாசிகள் ஒருமனதுடன் ஊக்கமாக ஜெபித்தனர். வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் பீஹார் சட்டமன்றத் தேர்தலுக்காகவும், ஊழியங்கள் தேர்தல் நாட்களில் தடைபடாதிருக்கவும் ஜெபிப்போம்.   

நவம்பர் 27 பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலம் விசுவாசிகள்  கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவித்தனர். நற்செய்தி அறிவிக்கப்பட்ட கிராமத்தின் மக்கள் இயேசுவை அறிந்துகொள்ளவும், ஊழியத்திற்கு அப்பகுதிகளில் திறந்த வாசல் உண்டாகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 28 சிக்காரியா, கருவந்தியா, நிம்மியாடி, தரிஹட் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் நற்செய்தி குழு ஊழியங்களின் வாயிலாக 915 சிறுவர் சிறுமியருக்கும், மேலும், கர்மா, பீஷ்ராம்பூர் மற்றும் அம்ரிடோலா ஆகிய பணித்தளங்களின் சிறுவர் காப்பகங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளிகளில் 245 சிறுவர் சிறுமியருக்கும் பாடல்கள் மற்றும் வேத வசனங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. சிறுபிள்ளைகள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், இவர்களது எதிர்காலத்திற்காகவும், இவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 29 தன்சா, சடுக்கி ஆகிய பணித்தளங்களில் ஆதிவாசி பிள்ளைகள் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினை அறிவித்து, அவர்களை விசுவாசத்தில் வளர்க்கவும்,  கர்மஹி பணித்தளத்தில் வீடு வீடாகச் சென்று குழந்தைகளைச் சந்திக்கவும் மற்றும் பெற்றோரைச் சந்தித்து அவர்களுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கவும், ஆண்டவரின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ள காலத்திற்குள் தடையின்றி செய்துமுடிக்கப்படவும், வரும் குளிர் காலங்களில் ஊழியங்கள் தடைபடாதிருக்கவும் ஜெபிப்போம். 

நவம்பர் 30 பணித்தளங்களில் நடைபெற்றுவரும் மருத்துவ ஊழியங்களின் வாயிலாக கடந்த மாதத்தில் 77 பேர் பயனடைந்தனர். சரீரத்திற்கான சிகிச்சையுடன் சத்தியத்தையும் அவர்களோடு பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் மாறவும், ஆராதனைக்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம். 


                                                   மத்திய மண்டலம் 



க்டோபர் : 27 பஞ்சாரி பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார்; இக்கூடுகையில், சகோ. அசோக் பால் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளுக்காக ஜெபித்தார். விசுவாசிகளை உற்சாகமடையச் செய்யும் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கூடவே பரிமாறப்பட்ட ஐக்கிய விருந்து விசுவாசிகளுக்குள் ஐக்கியத்தை உண்டாக்கியதுடன், உற்சாகத்தையும் உருவாக்கியது. கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்பட ஜெபிப்போம்.   

க்டோபர் : 28 பணித்தளங்களில், 35 இடங்களில் நடைபெற்ற வீட்டுக் கூடுகைகளில் 300 பேருடன் இணைந்து கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். ரோஹ்தாஸ் பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 350 விசுவாசிகள் பங்கேற்று பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் இன்னும் அநேக வீட்டுக் கூடுகைகள் ஆரம்பிக்கப்படவும், சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டோர் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், பணித்தளங்களில் ஊழியத் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.  

க்டோபர் : 29 திலௌத்து மற்றும் சைன்புரா பணித்தளங்களில் நடைபெற்ற இரவுக் கூட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்டு பணித்தளத்திற்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவளிக்கவும், கிறிஸ்துவின் அன்பினைப் பகிர்ந்துகொள்ளவும் கர்த்தர் கிருபை செய்தார். திலௌத்து பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் பிரச்சனைகள் மாறி விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படவும், நவாட்டா பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறவும் மற்றும் பட்காபுத்வா பணித்தளத்தில் பகற் பாதுகாப்பு மையம் கட்டப்படவும் ஜெபிப்போம்.  

க்டோபர் : 30 ராய்புரா மற்றும் அம்ரி பணித்தளங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்களில் 82 பேர் பங்கேற்றனர். உச்சைலா பணித்தளத்தில் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து நடைபெற்ற வேதாகமப் போட்டியில் 50 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வியாதியின் பிடியிலிருந்த அநேகரை கர்த்தர் விடுதலையாக்கினார்; தேவனுக்கே மகிமை! வரும் நாட்களில் பணித்தளங்களில் நடைபெறவிருக்கும் வாலிபர், பெண்கள் மற்றும் பிற ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

க்டோபர் : 31 ஹரிடோலா, பஞ்சாரி, டாலா, சட்னிபிஹா, சைன்புரா, நாகடோலி, கூபா, சிக்காரியா, மிர்ராசராய் மற்றும் திலௌத்து ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக நூற்றுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். நாகடோலி மற்றும் பஞ்ச்மகுல் பணித்தளங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவும், பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.  

SEP 2025

                                                   மத்திய மண்டலம் 


செப்டம்பர் 26 நபிநகர், டெஹ்ரி ஆன் சோன் உட்பட பல்வேறு பணித்தளங்களில் நடைபெற்ற வீட்டுக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். தரிஹட் பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் 90 பேர் பங்கேற்றனர். அத்துடன், கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசம் கூடுகையில் 150 பேரும், நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் மூன்று நாட்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 43 பேரும், பஞ்சாரி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாச கூடுகையில் 60 பேரும் கலந்து கொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் நடைபெற்று வரும் வீட்டுக் கூடுகைகளுக்காகவும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 27 டால்மியாநகர், பெசினிகேலா, ரபிகஞ்ச், மோனிநகர், பஸ்டி, ஹஸ்புரடி, அஹியாபுர், ஜினோரியா, கமரியா, கைத்தி, திலௌத்து, தும்பா, பூர்ணாதி, கமால், கைர்வா, கர்மா ஆகிய பணித்தளங்களில் 1090 சிறுவர் சிறுமியருக்கு வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். ஜெப வேளையின்போது 350 சிறுவர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். உச்சைலா பணித்தளத்தில் நடைபெற்ற வேதாகம வகுப்புகளில் 50 வாலிபர் பங்கேற்றனர். பணித்தளங்களில் நடைபெறும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் மற்றும் அவர்களது கல்வி, எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 28 கருவந்தியா பணித்தள மருத்துவ மையத்தின் (வுஆரு) மூலமாக பணித்தள மக்களுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற வியாதிகளைக் குறித்த, சுகாதாரத்திற்கடுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளத்தைச்  சுற்றியுள்ள அநேக கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பயனடைந்தனர்.  படுக்கையில் வியாதியாய் இருந்த சகோதரர் அஜய் குமாரின் மனைவி மற்றும் பிசாசின் பிடியினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் சங்கர் சிங் ஆகியோர் ஜெபத்தின் பலனாள் விடுதலை அடைந்தனர். பணித்தளங்களில் சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் சுகம் பெறவும், விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 29 தரிஹட் பணித்தளத்தில் தையல் பயிற்சியினை நிறைவு செய்த மூன்றாவது அணியினருக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து இங்கு தொடங்கப்படவிருக்கும் நான்காவது அணியினருக்கான பயிற்சியையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம். நவாட்டா பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலம் கிடைக்கவும், விரைவில் ஆலயம் கட்டப்பட்டு ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 30 பணித்தளங்களில் நடைபெற்று வரும் ஆலய மறு சீரமைப்புப் பணிகளுக்காகவும், சீரான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் கல்லறைத் தோட்டத்திற்கான நிலங்கள் விரைவில் கிடைக்கவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கான எதிர்ப்புகள் மாறவும் மற்றும்  எதிர்பாளர்கள் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.


August 2025

                                                         மத்திய மண்டலம் 

             


ஆகஸ்ட் 27 ரோஹ்தாஸ் பணித்தளத்தில் ஜூலை 2 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கில் ரோஹ்தாஸ் மற்றும் சுற்றியுள்ள பணித்தளங்களைச் சேர்ந்த 200 விசுவாசிகள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற ஊழியர் கூடுகையிலும் பணித்தள ஊழியர்கள் குடும்பமாகக் கலந்துகொண்டனர். இக்கூடுகைகளில், சகோ. எபிநேசர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளையும் மற்றும் ஊழியர்களையும் உற்சாகப்படுத்தினார். திலௌத்து பணித்தளத்தில் சுற்றுச் சுவர் கட்டுவதில் உண்டாகியிருக்கும் பிரச்சனைகள் நீங்கவும், நவாட்டா பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்றச் சூழ்நிலை உருவாகவும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 28 நாகடோலி, கல்யான்பூர், தாராநகர், ஜோனா, சுன்ஹட்டா, சந்தன்புரா, K-6, நிம்ஹட், நவ்டியா, பசாடி, டிலாபாத், சுட்டியா, டெட்ரார், தரிஹட், அம்பா, நவிநகர், டால்மியாநகர், லாவாபார் மற்றும் சேவஹி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 2145 சிறுவர்களுக்கு, பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் வேத வசனங்கள் மூலமாகக் கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது.  இச்சிறுவர்களின் பெற்றோர்களுக்காகவும், இவர்களது எதிர்காலத்திற்காகவும் மற்றும் இவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 29 உச்சைலா பணித்தளத்தில் ஞாயிறு தோறும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில், 47 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றுவருகின்றனர். படுக்கா பத்வா பணித்தளத்தில் கட்டப்பட்டு வரும் பகற் பாதுகாப்பு மையப் பள்ளிக் கட்டிடப் பணிகளுக்காகவும், கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலம் கிடைக்கவும், பஞ்சாரி பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் பணிகளுக்காகவும் நாசிரிகஞ்ச் பணித்தள விசுவாசிகள் தவறான உபதேசங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 30 ரோஹ்தாஸ் பணித்தளத்தில் LKG முதல் 2-ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியினைத் தொடங்க கர்த்தர் உதவி செய்தார். ஜூலை 7 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபத்துடன் பள்ளியைத் திறந்துவைத்தார். K-6 பணித்தளத்தில், 75 பேருக்கு உணவளித்து, கிறிஸ்துவின் அன்பினையும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். அம்பா மற்றும் நபிநகர் ஆகிய பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் நீங்கவும், டால்மியாநகர் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 31 சகோதரி பசந்தி குமாரி சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்து, தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்கேற்றுவருகிறார். சுகவீனமாயிருந்த பூனம் குமாரி ஜெபத்தினால் சுகமடைந்தார். மனைவி ஆலயத்திற்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த சஞ்சைராம், தனது நெஞ்சுவலி சுகமானதினால் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகிறார். ஜெபத்தின் பலனால், பிங்கி - பிரபு தம்பதியினருக்கு 15 வருடங்களுக்குப் பின் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும், சுகவீனமாயிருக்கும் விசுவாசிகளின் குடும்பத்தினர் சுகம் பெறவும் ஜெபிப்போம். 


July 2025

                                   மத்திய மண்டலம்


 ஜுலை 27  ஜுன் 10 அன்று, பாபுவா பணித்தள ஆலயத்தில், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, 'ஒரு நபர் ஒரு ஆத்துமா" என்ற கருப்பொருளினை மையமாகக்கொண்டு நடைபெற்ற சுவிசேஷகர்களை உருவாக்கும் கூட்டத்தில் பௌலியா, K-6 மற்றும் நாகடோலி பணித்தளங்களைச் சேர்ந்த 80 விசுவாசிகள் பங்கேற்றனர்.  சகோ. விக்டர் மற்றும் சகோ. குணசேகரன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். இப்பணித்தளங்களில் சுவிசேஷம் அறிவிப்பவர்களாக விசுவாசிகள் மாறவும், பணித்தள ஆலயங்களில் புதிய ஆத்துமாக்கள் சேரவும் ஜெபிப்போம். 

ஜுலை 28 கடந்த மாதத்தில் ரோஹ்தாஸ் கோட்டத்தில் நடைபெற்ற 30 வீட்டுக்  கூடுகைகளில் ரோஹ்தாஸ் கோட்டத்தின் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 425 விசுவாசிகள் பங்கேற்றனர். இக்கூடுகையின்போது, கிறிஸ்துவை அறியாத மக்களையும் சந்தித்து கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் பெருகிவரும் வீட்டுக்கூடுகைகளின் எண்ணிக்கைகளுக்காக கர்த்தரைத் துதிப்போம் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் வீட்டுக்கூடுகைகளின் எண்ணிக்கை பெருகவும் ஜெபிப்போம். 

ஜுலை 29 24 இடங்களில் நடத்தப்பட்ட உபவாசக்கூடுகையில் 220 விசுவாசிகள் பங்கேற்றனர்; அத்துடன், கோட்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட இரவு ஜெபங்களில் 250 விசுவாசிகள் பங்கேற்று பணித்தளங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர். பெண்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் 50 பேர் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டங்கள் வாயிலாக விசுவாசிகள் பெலனடையவும், சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக ஆத்துமாக்கள் மந்தையில் சேரவும் ஜெபிப்போம். 

ஜுலை 30  சிக்காரியா கோட்டத்தில் 11 பணித்தள ஆலங்களில் 1362 சிறுவர் சிறுமியருக்கும், ரோஹ்தாஸ் கோட்டத்தில் 14 கிராமங்களில் 1235 சிறுவர் சிறுமியருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இவர்கள் கிறிஸ்துவின் அன்பில் பெலனடையவும், சமுதாயத்திற்குச் சாட்சிகளாக வாழவும், இவர்கள் மூலமாக குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜுலை 31  K-6, சடுக்கி மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் வாயிலாக 320 பேர் பயனடைந்தனர். திலௌத்து பணித்தளத்தில் வறுமை நிலையிலிருக்கும் 80 பேருக்கு உணவளிக்கவும், பஞ்சாரி, திலௌத்து மற்றும் செயின்புரா பணித்தளங்களில் இலவச கல்வி ஊழியங்களைச் செய்யவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சமுதாயப் பணிகளுக்காகவும், வறுமை நிலையிலிருக்கும் பணித்தள மக்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.   


June 2025

                                                       மத்திய மண்டலம்


🗣         சல்மா  பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 25 பேர் கலந்துகொண்டு, பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். 

🗣 ரோஹ்தாஸ் கோட்டத்திற்குட்பட்ட பணித்தளங்களிலும் மற்றும் ஜெம்ஸ் சிறுவர் காப்பகங்களிலும் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்களின் மூலமாக சிறுவர் சிறுமியருக்கு வேதாகம சிறுகதைகள் மற்றும் சம்பவங்கள் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், ஜெப வாழ்க்கையில் அவர்களை வழிநடத்தவும் கர்த்தர் உதவி செய்தார்.

🗣 ரோஹ்தாஸ் பணித்தள ஆலயத்தில், ஞாயிறு தோறும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில், 50 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் பங்கேற்றுவருகின்றனர்.

🗣 ரோஹ்தாஸ் கோட்டத்தின் சடுக்கி, மு-6 மற்றும் சுன்னாகோட்டா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்களின் வாயிலாக 500 பணித்தள மக்களும், கருவந்தியா பணித்தளத்தின் தொலைதூர மருத்துவ ஊழியத்தின் வாயிலாக 52 பேரும் பயனடைந்தனர். மருத்துவ உதவியுடன் சுவிசேஷக் கைப்பிரதிகள் மூலமாக நற்செய்தியினையும் அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.

🗣 மே 6 அன்று பஞ்ச்மகுல் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லம் ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது.  சகோ. கோபோர்த் ஜெபத்துடன் ஊழியர் இல்லத்தைத் திறந்துவைத்தார்;. இந்நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் மற்றும் ஜெம்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

🗣 சிங்காரியா  பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் முகாமில், 215 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். பாடல்கள், ஆராதனைகள், குறுநாடகங்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக  வாலிபருக்கேற்ற வேதாகமச் சத்தியங்கள் அறிவிக்கப்பட்டதுடன், வாலிபருக்கேற்ற வேதாகமச் செய்திகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டு, ஆவிக்குரிய வாழ்க்கையின் வாலிபர்கள் வழி நடத்தப்பட்டனர். கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. 

🗣 டெஹ்ரி ஆன் சோன் பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் 12 பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்கள், ஞாயிறு பள்ளிகள், விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்கள் மற்றும் சிறுவர் நற்செய்திக் குழு ஊழியங்கள் வாயிலாக 1310 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க உதவிசெய்தார்.

🗣 தாராநகர் பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்ற நிலம் விரைவில் வாங்கப்படவும், பலுவாரி பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், ராய்ப்புரா பணித்தளத்தில் நடைபெற்று வரும் தெபோராள் பயிற்சி மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், லுக்கா சமுதாய மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், பணித்தளங்களில் உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் மற்றும் பணித்தள மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.